Chapter 079 - ஸூரத்துந் நாஜிஆத்


அத்தியாயம் - 79

ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-

79:2. (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

79:3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

79:4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

79:5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

79:6. பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;

79:7. அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.

79:8. அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.

79:9. அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.

79:10. ''நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?"" என்று கூறுகிறார்கள்.

79:11. ''மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?""

79:12. ''அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்"" என்றும் கூறுகின்றார்கள்.

79:13. ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-

79:14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.

79:15. (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?

79:16. 'துவா" என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,

79:17. ''நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.""

79:18. இன்னும் (ஃபிர்அவ்னிடம்; ''பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?"" என்று கேளும்.

79:19. ''அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்"" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).

79:20. ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.

79:21. ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

79:22. பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

79:23. அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

79:24. ''நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா"" என்று (அவர்களிடம்) கூறினான்.

79:25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.

79:26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

79:27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.

79:28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.

79:29. அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.

79:30. இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

79:31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.

79:32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.

79:33. உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

79:34. எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

79:36. அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

79:37. எனவே, எவன் வரம்பை மீறினானோ -

79:38. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

79:39. அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

79:40. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

79,41. நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

79:42. (நபியே! ''மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?"" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

79:43. அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

79:44. அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

79:45. அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

79:46. நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.